search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடை விடுமுறை"

    • வார விடுமுறையை கொண்டாட குழந்தைகளுடன் பெற்றோர்கள் கொடைக்கானலுக்கு அதிக அளவு வருகை தந்துள்ளனர்.
    • ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்தவாரே தரையிரங்கிய மேக கூட்டத்தை ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இதமான சீதோசனமும், இயற்கை எழில் கொஞ்சும் அழகும், கண்களை கவரும் வண்ண மலர்களும் இருப்பதால் வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கோடைகாலத்தில் அதிக அளவு மழை பெய்ததால் வெள்ளி நீர் வீழ்ச்சி, வட்டக்கானல், பியர்சோழா அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனை சுற்றுலா பயணிகள் தொலைவில் இருந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். வார விடுமுறையை கொண்டாட குழந்தைகளுடன் பெற்றோர்கள் கொடைக்கானலுக்கு அதிக அளவு வருகை தந்துள்ளனர். குறிப்பாக கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ் வாக், மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், பேரிஜம் ஏரி, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    கோடை விழா முடிந்தும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்தவாரே தரையிரங்கிய மேக கூட்டத்தை ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.

    கோடை விழா முடிந்த பின்னரும் வார விடுமுறையான இன்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இருப்பதால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

    • தெலுங்கானாவில் ஒவ்வொரு மாதமும் சுமார் 28 முதல் 30 லட்சம் பெட்டி பீர் விற்பனை செய்யப்படுகிறது.
    • கோடை விடுமுறை மற்றும் திருமண சீசன் காரணமாக பீர் விற்பனை அதிகமாக இருந்தது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் அக்னி நட்சத்திர வெயில் சுட்டெரித்தது. இதிலிருந்து தப்பிக்க மது பிரியர்கள் ஹாட் வகைகளிலிருந்து பீருக்கு மாறினர்.

    குடிமகன்களை கவருவதற்காக தெலுங்கானா மாநிலத்தில் 300 வகையான பீர் விற்பனைக்கு வந்தன. 650 மில்லி மற்றும் 350 மில்லி என 2 அளவுகளில் பீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது.

    மேலும் கடந்த மாதம் ஒரு பாட்டில் பீர் ரூ.10 விலையும் குறைக்கப்பட்டது.

    இதனால் அனைத்து மது கடைகளிலும் பீர் விற்பனை அதிகரித்தது. குறிப்பாக பிரசித்தி பெற்ற 12 வகையான பீர்கள் அதிக அளவில் வாங்கி குடித்தனர்.

    நாளுக்கு நாள் அதிகரித்த வெயில் காரணமாக குடிமகன்கள் பீர் வாங்கி குடித்து பொழுதை கழித்தனர்.

    இதனால் இந்த ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் வரலாற்று சாதனையாக 7.4 கோடி பீர் பாட்டில்கள் விற்பனையாகி உள்ளன. மொத்தமாக கணக்கிட்டு பார்த்தால் 4 கோடி லிட்டர் பீர் மது பிரியர்கள் குடித்துள்ளனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் அதிகபட்சமாக 7.2 கோடி பாட்டில்கள் விற்பனையாகி இருந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானாவில் ஒவ்வொரு மாதமும் சுமார் 28 முதல் 30 லட்சம் பெட்டி பீர் விற்பனை செய்யப்படுகிறது.

    கோடை விடுமுறை மற்றும் திருமண சீசன் காரணமாக பீர் விற்பனை அதிகமாக இருந்தது. மேலும் விலை குறைப்பும் விற்பனை அதிகரிப்பு காரணமாக இருந்துள்ளது.

    வருங்காலங்களில் மேலும் பீர் விற்பனை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டம்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வார இறுதி நாட்களில் சென்னைக்கு 900 பேருந்துகளும், மற்ற மாவட்டங்கள் மற்றும் பெங்களூருவுக்கு 1300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2200 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

    இதேபோல், மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    • எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பொதுமக்களின் பஸ் பயணம் அதிகரித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
    • வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக ‘ஸ்பேர்’ பஸ்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. மே மாதம் முழுவதும் விடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந்தேதி பள்ளிக்கூடம் திறப்பதாக இருந்தது.

    ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜூன் 7-ந்தேதிக்கு பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு சொந்த ஊர், சுற்றுலா தலங்கள் சென்றவர்கள் பள்ளி திறப்பது தாமதம் ஆனதால் பயணத்தை தள்ளி வைத்தனர்.

    மேலும் ஒரு வாரம் கழித்து பள்ளிகள் திறப்பதால் வெளியூர் சென்றவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு வருவது தள்ளிப்போகிறது. 3-ந்தேதியில் இருந்து 6-ந்தேதி வரை வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

    அதனால் அரசு போக்குவரத்து கழகத்திலும் உள்ள பஸ்களை முழு அளவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீண்டதூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு அதிகரித்துள்ளது.

    எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பொதுமக்களின் பஸ் பயணம் அதிகரித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக 'ஸ்பேர்' பஸ்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற 5-ந்தேதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் இருந்தும் பிற நகரங்களில் இருந்தும் மக்கள் அதிகளவில் பயணம் செய்கிறார்கள். திருமணம், உள்ளிட்ட சுபகாரியங்கள் அதிகம் நடப்பதால் வெளியூர் பயணம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் சென்னையில் இருந்து இயக்கப்படும் 2,200 பஸ்கள் தவிர கூடுதலாக 500 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதேபோல வெளியூர்களில் இருந்தும் சென்னைக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனாலும் மக்கள் கூட்டம் எதிர்பாராமல் வருகிறது. குறிப்பாக நள்ளிரவு நேரத்தில் வந்தால் திடீரென பஸ் வசதியை எவ்வாறு ஏற்படுத்தி கொடுக்க முடியும். வெளியூர் செல்பவர்கள் முன்பதிவு செய்தால் அதனை கணக்கிட்டு தேவையான பஸ் வசதியை ஏற்படுத்தி தர முடியும்.

    விழுப்புரம், சேலம், மதுரை, கோவை, கும்பகோணம் ஆகிய போக்குவரத்து கழகத்தில் இருந்து கூடுதலாக பஸ்கள் பெறப்பட்டு கூட்டத்தை சமாளிக்க திட்டமிட்டுள்ளோம். 7-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மலர்க் கண்காட்சி நடைபெற்ற 5 நாட்களில் மட்டுமே 1 லட்சத்து 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்தனர்.
    • சுற்றுலாபயணிகள் வருகை மூலம் ரூ.4 கோடியே 73 லட்சம் வருவாயாக கிடைத்துள்ளது.

    ஊட்டி:

    சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு ஆண்டுதோறும் சுமார் 35 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

    சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கோடை காலத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது.

    அதன்படி, இந்த ஆண்டு மே 6-ந் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா ஆரம்பமானது. தொடர்ந்து, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி, தாவரவியல் பூங்காவில் 125-வது மலர்க் கண்காட்சி, குன்னூரில் பழக் கண்காட்சி ஆகியவை நடைபெற்றன.

    மலர்க் கண்காட்சி நடைபெற்ற 5 நாட்களில் மட்டுமே 1 லட்சத்து 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்தனர். ரோஜா கண்காட்சியை 50 ஆயிரம் பேரும், பழக் கண்காட்சியை சுமார் 25 ஆயிரம் பேரும் கண்டு ரசித்துள்ளனர்.

    தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறும் போது, இந்தாண்டு ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் மட்டும் 8 லட்சத்து 61 ஆயிரத்து 214 சுற்றுலாபயணிகள் அரசு தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர். இதன் மூலம் ரூ.4 கோடியே 73 லட்சம் வருவாயாக கிடைத்துள்ளது.

    ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3 லட்சத்து 33 ஆயிரத்து 752 பேரும், மே மாத்தில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 283 பேரும், மலர் கண்காட்சியின் போது 1 லட்சத்து 30 ஆயிரத்து 179 சுற்றுலாபயணிகளும் வந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1 லட்சத்து 27 ஆயிரத்து 161 சுற்றுலாபயணிகள் அதிகம் வருகை தந்துள்ளனர் என்றனர்.

    இந்நிலையில், சுமார் ஒரு மாதம் நடைபெற்ற கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்வுக்கு கோட்டாட்சியர் துரைராஜ் தலைமை வகித்தார். பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

    • வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.
    • கொடிவேரி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள்.

    மேலும் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பொது மக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. மேலும் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் கொடிவேரி உள்பட மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    இதே போல் கொடிவேரியில் கடந்த 2 மாதமாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதி வருகிறது.

    இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொடிவேரிக்கு அணைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். இதே போல் நேற்று (சனிக்கிழமை) கொடிவேரி தடுப்பணைக்கு அதிகளவில் பொதுமக்கள் வந்திருந்தனர்.

    இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

    ஈரோடு மாவட்ட பொது மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மக்களின் கூட்டம் அலை மோதியது.

    தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

    கடந்த சில நாட்களாக கொடிவேரி மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியாக காணப்பட்டது. கடும் வெயிலின் தாக்கத்தால் அவதிபட்டு வந்த பொது மக்கள் தற்போது குளிர்ந்த காற்று வீசுவதால் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் கொடிவேரி அணையில் குளித்து மகிழ்ந்தனர்.

    இதையொட்டி கொடிவேரி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் 80 அரசு பள்ளிகளும், 179 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. இவற்றில் 3½ லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • அனைவருக்கும் விலையில்லா பாடபுத்தகங்கள் பள்ளி திறக்கும் முதல் நாளில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 1-ந்தேதி 6 முதல் 12-ம் வகுப்பு வரையும், 5-ந்தேதி 1 முதல் 5-ம் வகுப்பு வரையும் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    இதையொட்டி பள்ளி வளாகங்களில் தூய்மை பணி, வகுப்பறைகள் பராமரிப்பு, சேதமடைந்த மேஜைகள் சரி பார்ப்பு ஆகியவை தீவிரமாக நடந்து முடிந்துள்ளது. சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குடிநீர் தொட்டி, கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் 80 அரசு பள்ளிகளும், 179 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. இவற்றில் 3½ லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இவர்கள் அனைவருக்கும் விலையில்லா பாடபுத்தகங்கள் பள்ளி திறக்கும் முதல் நாளில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி சிந்தாதிரிப்பேட்டை, வேளச்சேரி, திருவல்லிக்கேணி பகுதிகளில் நடந்து வருகிறது.

    அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் அங்கு சென்று தங்கள் பள்ளிகளுக்கு தேவையான பாட புத்தகங்களை பெற்றுச் செல்கின்றனர்.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தனியார் பள்ளிகள் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள குடோனில் பெற்றுச் செல்கின்றன.

    • ரெயில், பஸ்களில் டிக்கெட் கிடைக்காத பயணிகள் விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள்.
    • ஜூன் முதல் வாரத்தில் சென்னையில் இருந்து பெரும்பாலான நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை உள்ளது.

    ஆலந்தூர்:

    கோடை விடுமுறையையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

    ஏற்கனவே வரும் நாட்களுக்கான ரெயில் மற்றும் ஆம்னி பஸ்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு முடிந்து விட்டன. ரெயில்களில் காத்திருப்போர் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

    இதைத்தொடர்ந்து இப்போது பெரும்பாலானோர் தற்போது அரசு விரைவு பஸ்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். அதிலும் தற்போது பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் இருக்கையை முன்பதிவு செய்யாமல் அவசரமாக கடைசி நேரத்தில் செல்லும் பயணிகள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    இதேபோல் ரெயில், பஸ்களில் டிக்கெட் கிடைக்காத பயணிகள் விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள். ஏற்கனவே உள்நாட்டு பயணத்துக்கு விமான பயணத்தை தேர்வு செய்வது அதிகரித்து உள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, மும்பை, திருவனந்தபுரம், டெல்லி, கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.

    இதன் காரணமாக விமான டிக்கெட்டுகளின் கட்டணமும் அதிரடியாக உயர்ந்து உள்ளது. ஜூன் முதல் வாரத்தில் சென்னையில் இருந்து பெரும்பாலான நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை உள்ளது.

    சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.6500 முதல் ரூ.10 ஆயிரம், திருச்சி-ரூ.4400 முதல் ரூ.8 ஆயிரம், கோவை-ரூ.3400 முதல் ரூ.5 ஆயிரம், கொச்சி-ரூ.5600 முதல் ரூ.8500, மும்பை-ரூ.4300 முதல் ரூ.7 ஆயிரம், டெல்லி-ரூ.6400 முதல் ரூ.13 ஆயிரம், திருவனந்தபுரம்-ரூ.3700 முதல் ரூ.6 ஆயிரம், தூத்துக்குடி ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9500 வரை உள்ளது.

    இதேபோல் ஆம்னி பஸ்களில் கட்டணமும் அதிகரித்து உள்ளது. மதுரைக்கு ரூ.1090 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், திருச்சிக்கு ரூ.1600 முதல் ரூ.2700 வரையும், கோவை-ரூ.1400 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், தூத்துக்குடி-ரூ.950 முதல் ரூ.3 ஆயிரம் வரையும், கொச்சி-ரூ.1300 முதல் ரூ.3 ஆயிரம் வரையும், திருவனந்தபுரம்-ரூ.2500 முதல் ரூ.2700 வரையும் அதிகமாக உள்ளது.

    ஆம்னி பஸ்கள் மற்றும் விமான டிக்கெட்டுகள் கட்டணம் உயர்வு காரணமாக சொந்த கார்கள் வைத்திருப்பவர் அதிலேயே தொலைதூர பயணம் மேற்கொள்வதும் அதிகரித்து உள்ளது. மேலும் வாடகை கார் டிரைவர்களை அமர்த்தியும் பயணம் செய்து வருகின்றனர்.

    சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்திலும் முன்பதிவு செய்து காத்திருக்கும் பயணிகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் 15-ந்தேதி வரை 50 முதல் 70 வரை உள்ளது. மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரெயிலில் ஜூன் 5-ந்தேதிக்கு பிறகே இருக்கைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வருகிற கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பதை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
    • கோடை வெயிலின் தாக்கம் பல மாவட்டங்களில் அதிகம் இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    பள்ளிக்கூடங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டது.

    இந்த நிலையில் வருகிற கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பதை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5-ந் தேதியும், 6 முதல் பிளஸ்-2 வரையான வகுப்புகளுக்கு ஜூன் 1-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் இப்போது கோடை வெயிலின் தாக்கம் பல மாவட்டங்களில் அதிகம் இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தற்போது கோடை வெயில் அதிகமாக தெரிவதால் பள்ளிக்கூடங்கள் திறப்பதை மாற்றி அமைக்க ஆலோசனை நடத்தினோம். ஜூன் 5 அல்லது 7 ஆகிய தேதிகளில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    இது தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. ஆலோசனையின் அடிப்படையில் கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாதுகாப்பில்லாத இடங்களில் பூட்டி கிடக்கும் வீடுகள் பற்றி போலீசார் விசாரித்து போன் நம்பர் வாங்கி எப்போது திரும்பி வருவீர்கள் என்று விசாரிக்கிறார்கள்.
    • பொதுமக்கள் ஜாலியாக சொந்த ஊர்களில் இருக்கும் நிலையில் அவர்களது வீடுகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    கோடை விடுமுறையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விடுவார்கள்.

    சிலர் கோடை விடுமுறை முழுவதையும் சொந்த ஊரில் கழிப்பார்கள். சிலர் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவார்கள்.

    இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் பூட்டி கிடக்கின்றன. அவ்வாறு பூட்டி கிடக்கும் வீடுகளை பகல் நேரங்களில் வியாபாரிகள் போல் சென்று நோட்டம் போட்டு இரவில் பூட்டை உடைத்து கொள்ளையடித்து செல்வதுண்டு. கடந்த ஆண்டு அந்த மாதிரியான சம்பவங்கள் சில இடங்களில் நடந்தன.

    இந்த ஆண்டும் அதே போல் நடக்கும் கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார்கள். சென்னை, தாம்பரம் மாநகர பகுதியிலும், ஆவடி பகுதியிலும் பூட்டி கிடக்கும் வீடுகளை தினமும் கண்காணிக்க சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், ஆவடி போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் காவல் துணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

    தினமும் பகல், மாலை, நள்ளிரவு ஆகிய 3 நேரமும் பூட்டிய வீடுகளை போலீசார் கண்காணிப்பார்கள். அடுக்குமாடி குடியிருப்புகளில் பூட்டி கிடக்கும் வீடுகள் பற்றி குடியிருப்போர் நலச்சங்கங்களிடம் தகவல் கேட்டு அவற்றையும் கண்காணிப்பார்கள்.

    வீடுகளை பூட்டி செல்வது பற்றி அருகில் இருக்கும் போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஏற்கனவே போலீசார் அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் பலர் அதை கடைபிடிப்பதில்லை.

    பாதுகாப்பில்லாத இடங்களில் பூட்டி கிடக்கும் வீடுகள் பற்றி போலீசார் விசாரித்து போன் நம்பர் வாங்கி எப்போது திரும்பி வருவீர்கள் என்றும் விசாரிக்கிறார்கள்.

    பொதுமக்கள் ஜாலியாக சொந்த ஊர்களில் இருக்கும் நிலையில் அவர்களது வீடுகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • வார இறுதி நாட்களான கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளான 2 நாளில் மட்டும் 10 ஆயிரத்து 500 சுற்றுலா பயணிகள் இங்கு வந்துள்ளனர்.
    • கோவை குற்றாலத்தில் உரிய அடிப்படை வசதிகள் இல்லை என சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் முக்கியமானது கோவை குற்றாலம். அடர்ந்த வனத்திற்கு நடுவே இந்த அருவி இருப்பதால் இந்த சுற்றுலா தலத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    அவர்கள் அருவியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து, வனத்தில் உள்ள இயற்கை காட்சிகள் மற்றும் வனவிலங்குகளையும் கண்டு ரசித்து வருகின்றனர்.

    தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாகவே கோவை குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

    பல்வேறு பகுதிகளில் இருந்தும், கார், மோட்டார் சைக்கிள், வேன் போன்ற வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    வார இறுதி நாட்களான கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளான 2 நாளில் மட்டும் 10 ஆயிரத்து 500 சுற்றுலா பயணிகள் இங்கு வந்துள்ளனர். கடந்த திங்கள் முதல் தற்போது வரை 2,500 பேர் வந்துள்ளனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து கொண்டே சென்றாலும், கோவை குற்றாலத்தில் உரிய அடிப்படை வசதிகள் இல்லை என சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் குடும்பத்துடன் பொழுதை கழிப்பதற்காக கோவை குற்றாலத்திற்கு வந்துள்ளோம். இங்குள்ள அருவியில் குளித்து மகிழ்ந்து விட்டு, இயற்கை காட்சியை கண்டு ரசித்து வருகிறோம்.

    கூட்டம் மிகவும் அதிகமாக உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளுக்கு என நுழைவு வாயில் 2 கழிப்பறைகள் மற்றும் நீர்வீழ்ச்சியின் அருகே சில கழிப்பறைகள் உள்ளன.

    ஆனால் தற்போது கோடை விடுமுறையையொட்டி இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இதனால் இந்த கழிப்பறைகள் போதுமானதாக இல்லை. கழிப்பறை செல்வதற்கு வெகுநேரம் வரிசையில் காத்திருக்கும் நிலையும் ஏற்படுகிறது. எனவே சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் நடமாடும் கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் டிக்கெட் கவுண்டரிலும் டிக்கெட் எடுப்பதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. கூடுதல் பணியாளர்களை நியமித்து, விரைவில் டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இங்கு சுற்றுலா பயணிகள் தங்கி கொள்வதற்காக மர வீடுகள் உள்ளன. ஆனால் அந்த வீடுகளில் மழைக்காலங்களில் தண்ணீர் கசிந்து வருகிறது. மேலும் மின்தடையும் ஏற்படுகிறது. எனவே கோவை குற்றாலத்தில் முக்கிய அடிப்படை வசதிகளை வனத்துறையினர் செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக கழிப்பறைகள் மற்றும் நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    பெருகி வரும் தேவைக்கு ஏற்ப மேலும் சில நடமாடும் கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு ரூ.30 லட்சம் செலவில் தொங்குபாலம் புதுப்பிக்கும் பணி நடக்க உள்ளது என்றார்.

    • அரசு பஸ்களிலும் இருக்கைகளை முன்பதிவு செய்து இப்போது ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்.
    • நீண்ட நேரமாக காத்திருந்தும் பஸ்கள் கிடைக்காததால் பயணிகள் நள்ளிரவு வரை குடும்பத்துடன் தவித்தனர்.

    போரூர்:

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உட்பட பல்வேறு இடங்களுக்கு அரசு விரைவுபஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    கோடை விடுமுறையை முன்னிட்டு தற்போது பலர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று வருகின்றனர்.

    இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு பஸ் நிலையத்தில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரெயில், தனியார் பஸ்களில் முன்பதிவு இருக்கைகள் முழுவதும் முடிந்துவிட்டதால் அரசு பஸ்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு பஸ்களிலும் இருக்கைகளை முன்பதிவு செய்து இப்போது ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்.

    முன்பதிவு இல்லாமல் கடைசி நேரத்தில் வரும் பயணிகள் பலர் கிடைக்கின்ற பஸ்களில் எல்லாம் முண்டியடித்துக் கொண்டு ஏறி செல்லும் நிலை உள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்வதற்காக பயணிகள் அதிகளவில் குடும்பத்துடன் குவிந்தனர்.

    ஆனால் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் முன்பதிவு இல்லாத பஸ்கள் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே இயக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதனால் நீண்ட நேரமாக காத்திருந்தும் பஸ்கள் கிடைக்காததால் பயணிகள் நள்ளிரவு வரை குடும்பத்துடன் தவித்தனர். இதுபற்றி அங்கிருந்த போக்குவரத்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டார் திடீரென 5 மற்றும் 6-வது பிளாட்பாரத்தில் ஒன்று திரண்டனர். அவர்கள் அங்கு முன்பதிவு செய்த பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த பஸ்சை வழிமறித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பஸ்நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களிடம் போக்கு வரத்து ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டது குறித்து கேட்டு அவர்களிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பஸ் நிலைய போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக மாற்று பஸ்கள் ஏற்பாடு செய்தனர். பின்னர் நள்ளிரவு 1மணி அளவில் பயணிகள் அனைவரும் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

    சென்னையில் கோடை விடுமுறை மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சொந்த ஊர் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் குறைந்த அளவில் தான் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி இது போன்று சிரமத்திற்கு ஆளாகி தவித்து வருகிறோம்.

    ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் அரசு பஸ்களில் பயணம் செய்ய தற்போது அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே அனைத்து பண்டிகை உள்ளிட்ட முக்கிய விஷேச நாட்களில் முன்பதிவு இல்லாமல் பயணம் மேற்கொள்ள வரும் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×